ஸ்ரீலங்கா சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஆசியா கம்யூன் ஆகியவற்றின் கூட்டு செய்தி அறிக்கை.

ஈஸ்டர் ஞாயிறு படுகொலை:
உண்மையை வெளிக்கொணரக் கோரும்  பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கோம் ரஞ்சித் அவர்கள், இன, மத பேதமின்றி,ஏப்ரல் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலிருந்து நீர்கொழும்புக்கு ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒன்றிணைந்து ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உண்மையும் நீதியும் கோரி வலுவான மனிதச் சங்கிலியை உருவாக்குமாறு இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கும்  அழைப்பு விடுத்துள்ளார். 

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் இந்தக் கோரிக்கையை இலங்கை சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஆசியா கம்யூன் ஆகிய நாங்கள் நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம். எமது நாட்டு மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்காக இந்த பொது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கையின் நீதியை விரும்பும், நேர்மையான மற்றும் நியாயமான குடிமக்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு படுகொலைகள் நடைபெற்று 4 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அந்த படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி வழங்க இலங்கையின் ஆட்சியாளர்கள் தவறியுள்ளனர். மாறாக, இந்த தாக்குதலுக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை தண்டனையிலிருந்து காப்பாற்றவும் அவர்கள் குற்றங்களை  மூடி மறைக்கவும்  இலங்கையின் ஆளும்  மேல்தட்டு வர்க்கத்தினர் தங்கள் அரச அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர், மேலும் இந்தக் கொலைகளை தங்கள் அரசியல் அதிகார விளையாட்டுகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.

இலங்கையில் ஆளும் மேல்தட்டு வர்க்கத்தினரின்  இந்த அவமானகரமான முயற்சிகளை முறியடிக்கவும், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தவும் ஏப்ரல் 21 வெள்ளிக்கிழமை கொழும்பு, கொச்சிக்கடை முதல் நீர்கொழும்பு வரை நீண்டு செல்லும் மனிதச் சங்கிலியில் இணைவோம்!

இலங்கை சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஆசிய கம்யூன்

(தலைமைச் செயலகம்,பிரான்ஸ்)